நம்பிக்கையை மதிப்பதும் பகுத்தறிவுதான்!
என்னிடம் நட்பு பாராட்ட வருபவர்களிடம் முதல் சந்திப்பிலேயே ஒன்றைச் சொல்லிவிடுவேன் .. நான் ஒரு பெரியாரியவாதி .. என்று.. இதைச் சொன்னவுடன் சிலருடைய முகத்தில் மெல்லியதொரு பதற்றம் தோன்றும். இனி இவர் கடவுளைத் திட்டுவாரோ , கோயில்களை இடிக்கச் சொல்வாரோ , நெற்றியில் திருநீறு வைத்திருப்பவர்களுடன் சண்டையிடுவாரோ என்றெல்லாம் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் , என்னுடைய பெரியாரியம் என்பது கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் எதிர்ப்பதல்ல. கண்ணைத் திறந்து அனைத்தையும் கேள்வி கேட்பது. எங்களுடைய வாழ்வியலுக்கான அடிப்படைக் கோட்பாடாக நாங்கள் வகுத்துக்கொண்டது மிகவும் எளிமையானது.. மனிதர்கள் அனைவரும் சமம்.. அவர்களுக்கிடையில் உயர்வு, தாழ்வு சாதியால், பாலினத்தால், மதத்தால், அவரவர்கள் செய்யும் தொழிலால், பணத்தால் வருவதில்லை. ஒரு மனிதனின் பிறப்பு , இன்னொரு மனிதனின் காலடியில் வாழ்வதற்கான தண்டனையாக இருக்க முடியாது. ஒருவருடைய பாலினம் , அவருடைய உரிமைகளுக்கான எல்லையாக இருக்க முடியாது. பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் ஒருவரின் மரியாதை குறைந்துவிடவும் முடியாது. இவையெல்லாம் இன்று சொல்வதற்கு மிகச் சாதாரணமான கருத்துகள்போலத் தோன...