சாங்வான் குறிப்புகள் #07
பியோதர் தஸ்தோவஸ்கியின் வெண்ணிற இரவுகளில் வரும் கனவுக்காரனைப் போல, இந்த வெக்கை இரவுகளில் நானும் நடக்கிறேன். அவன் நாஸ்தென்காவைத் தேடினான். நான் காற்றைத் தேடுகிறேன்.. கொரியாவில் கோடை காலம் வந்துவிட்டது.. வெப்பநிலை முப்பதிலிருந்து முப்பதைந்து வரைதான் என்றாலும், காற்றில் இருக்கும் அதீத ஈரப்பதத்தால் வியர்வை சுரப்பிகள் அழுது தீர்க்க தொடங்கிவிட்டன.. வெளியில் இப்படி என்றால், வீட்டினுள் கேட்கவே வேண்டாம்.. எட்டாவது மாடியில் கிழக்கு, மேற்கு என இரண்டு பக்கங்களிலும், மொத்தமாக நான்கு சன்னல்களுக்கு நடுவே நான் அடைந்திருப்பதால், காற்று முதலில் என் உரோமங்களுடன் கைகுளுக்கிய பின்தான் கீழிறங்கும்.. ஆனால் இன்று அந்த உரோமத்திற்கு கூட.. சாரி.. சூடான காற்றுக்கு கூட வழியில்லை.. இறுக்கமாக இருக்கிறது.. என்னதான் கேட்ஜட்களிடம் என் மனதை, முன்பணம் இல்லாமலேயே வாடகைக்கு கொடுத்திருந்தாலும், இந்த குளிரூட்டிகளை மட்டும் ஏற்கமுடியவில்லை.. காரணம், இரவில் அதன்துணையுடன் தூங்கிவிட்டு காலையில் வெளியில் வரும்பொழுது, இந்த உலகமே என்னை வெறுத்து வெப்பதை என் மேல் உமிழ்ந்து உடல்முழுவதும் நீர் கடுப்பு ஏற்படுவதுபோல் இருக்கும்.. ...