கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்

 நாட்குறிப்பை பதிவு செய்கிறேனோ இல்லையோ, நாட்குறிப்பேட்டை மட்டும் அழகானதாக வாங்கிவைத்துக்கொள்வது என்னுடைய வழக்கம்.. இந்தப் பழக்கம், என்னுடைய நண்பன் வினோவிடமிருந்து வந்தது.. டிசம்பர் வந்துவிட்டால் போதும், மொத்த தஞ்சாவூரையும் அலசி ஆராய்ந்து, குறைந்தது இரண்டு மூன்று நாட்குறிப்பேட்டையாவது வாங்கிவிடுவான்.. தாத்தாவிற்கு ஒன்று, எனக்கொன்று, என..

அவனுடைய கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்.. எத்தனை பாடுபட்டும், அந்த கையெழுத்து எனக்கு வாய்க்கவில்லை.. கையெழுத்தில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.. அந்த நாட்குறிப்பை எழுதிவிட்டு, என்னுடைய கையெழுத்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னாலேயே வாசிக்கமுடியாது என்பதை நினைக்கையில், அந்த நாட்குறிப்பேடு இரண்டு நாட்களுடன் தன் வாழ்வின் பலனை முழுவதும் பெற்றுவிட்டதைப்போல, வெற்று காகிதமாகவே எஞ்சி நின்றுவிடும்.. பின்னர், ஆண்டு பொறிக்கப்பட்ட அந்த குறிப்பேட்டின் பக்கங்கள், தனக்கு தொடர்பே இல்லாத ஒரு அண்டின் நாட்களில் நடக்கும் செல்வுகளையும் அதன் கூட்டுத்தொகையையும் தாங்கி நிற்கும்..

பிற்பாடு, கையெழுத்து சரியில்லை என்றாலும் எழுதலாமே என்று தவறாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.. தினந்தினம் பெரும்பாலும் செலவு கணக்குகள் தான்.. ஒரே ஒரு வரவுக்கணக்கு (மாதம் ஒருமுறைதான் ஊதியம் ஆனால் அனைத்து நாட்களும் செலவு இருக்கிறதே..).. இடையிடையே, சில நிகழ்வுகள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள், இன்ப துன்பங்கள் என எழுதி பதிவுசெய்துகொண்டிருக்கிறேன் என்றாலும், அதனை மீண்டும் வாசிக்கையில், இதற்காகவா துன்பப்பட்டோம், இதற்காகவா இன்புற்றோம் என்ற வகையில்தான் காலத்திற்கு காலம் என்னுடைய உணர்வுகள் மாறுபட்டு நிற்கின்றன..


ஆனால், ஒரு மனிதன், தன் வாழ்நாளில் நடந்த முக்கிய குறிப்புகளை அப்படியே நாட்குறிப்பேட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.. அதுவும், ஒன்று இரண்டு ஆண்டுகள் அல்ல, இருபது ஆண்டுகள்.. 1951 ஆம் ஆண்டில் இருந்து 1970 ஆம் ஆண்டு வரையிலான குறிப்புகள்.. அந்த இருபது ஆண்டுகால நாட்குறிப்புகளும் தற்பொழுது தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்திருக்கிறது.. ஆமாம்.. கு. அழகிரிசாமிதான் அந்த நாட்குறிப்புகளை எழுதியிருக்கிறார்.. முதல் முதலாக, தமிழில் ஒருவரின் இருபது ஆண்டுகால நாட்குறிப்பு புத்தகமாக வெளிவருகிறது.. வாசிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.. கிண்டிலில் கிடைத்தால் நன்றாக இருக்கும்..

இந்த நூலை பழ. அதியமான் அவர்கள் பதிப்பித்திருக்கிறார்.


சகா..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு...

விளையாட்டாக சொல்கிறேன் #2

சாங்வான் குறிப்புகள்#01